Sunday, 12 January 2014
ஆலயநுழைவு
எவ்வுயிரும் பரன் சந்நிதி யாமென்
றிசைத்திடும் சாத்திரங்கள் - எனில்
அவ்விதம் நோக்க அவிந்தன வோநம்
அழகிய நேத்திரங்கள்? 1
திவ்விய அன்பிற் செகத்தையெல் லாம்ஒன்று
சேர்த்திட லாகும்அன்றோ? - எனில்
அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில்
அத்தனை பேரும்ஒன்றே. 2
ஏக பரம்பொருள் என்பதை நோக்கஎல்
லாரும் உடன்பிறப்பே - ஒரு
பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதி
லேஉள்ள தோசிறப்பே? 3
'தேகம் சுமைநமைச் சேர்ந்ததில் லை' என்று
செப்பிடும் தேசத்திலே - பெரும்
போகம் சுமந்துடற் பேதம்கொண் டோம்;மதி
போயிற்று நீசத்திலே. 4
என்னை அழைக்கின்ற கோயிலின் சாமி
எனக்கிழி வாய்த்தெரியும் - சாதி
தன்னை விலக்கிடு மோஇதை யோசிப்பீர்
சமுக நிலைபுரியும். 5
என்னை அளித்தவர் ஓர்கடவுள் மற்றும்
ஏழையர்க் கோர்கடவுள் - எனில்
முன்னம் இரண்டையும் சேர்த்துருக் குங்கள்
முளைக்கும் பொதுக்கடவுள். 6
உயர்ந்தவர் கோயில் உயர்ந்ததென் பீர்மிகத்
தாழ்ந்தது தாழ்ந்ததென்பீர் - இவை
பெயர்ந்து விழுந்தபின் பேதமிலா ததைப்
பேசிடுவீர் அன்பீர். 7
உயர்ந்தவர் கையில் வரத்தினைச் சாமி
ஒளிமறைவில் தரத்தான் - மிகப்
பயந்திழிந் தோர்களைக் கோயில் வராவண்ணம்
பண்ணின தோஅறியேன். 8
சோதிக் கடவுளும் தொண்டரும் கோயிலிற்
சூழ்வது பூசனையோ - ஒரு
சாதியை நீக்கினர்; தலையையும் வாங்கிடச்
சதியா லோசனையோ? 9
ஆதித் திராவிடர் பாரதர்க் கன்னியர்
என்று மதித்ததுவோ? - சாமி
நீதிசெய் வெள்ளையர் வந்ததும் போய்க்கடல்
நீரிற் குதித்ததுவோ? 10
மாலய மாக வணங்கிடச் சாமி
வந்திடு வார்என்றீரே - அந்த
ஆலயம் செல்ல அநேகரை நீக்கி
வழிமறித் தேநின்றீரே. 11
ஆலயம் செல்ல அருகரென்ற சிலர்
அங்கம் சிறந்தாரோ? - சிலர்
நாலினும் கீழென்று நாரி வயிற்றில்
நலிந்து பிறந்தாரோ? 12
தாழ்ந்தவர் தம்மை உயர்ந்தவ ராக்கிடச்
சாமி மலைப்பதுண்டோ? - இங்கு
வாழ்ந்திட எண்ணிய மக்களைச் சாமி
வருத்தித் தொலைப்பதுண்டோ? 13
தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்திலையோ? - எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட
மேலும் சமர்த்திலையோ? 14
தன்னை வணங்கத் தகாதவரை அந்தச்
சாமி விழுங்கட்டுமே - அன்றி
முன்னை யிருந்த கல்லோடு கல்லாகி
உருவம் மழுங்கட்டுமே. 15
இன்னலை நீக்கிடும் கோயிலின் சாமி
இனத்தினில் பல்கோடி - மக்கள்
தன்னை வணங்கத் தகாதென்று சொல்லிடிற்
சாவது வோஓடி? 16
குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற்
கொஞ்சமும் தீட்டிலையோ? - நாட்டு
மக்களிலே சிலர் மாத்திரம் அந்த
வகையிலும் கூட்டிலையோ? 17
திக்கெட்டு மேஒரு கோயிலன்றோ? அதில்
சேரிஅப்பால் இல்லையே - நாளும்
பொய்க்கட் டுரைப்பவர் புன்மையும் பேசுவர்
நம்புவதோ சொல்லையே? 18
தாழ்ந்தவர் என்பவர் கும்பிடு தற்குத்
தனிக்கோயில் காட்டுவதோ? - அவர்
வாழ்ந்திடு தற்கும் தனித்தேசம் காட்டிப்பின்
வம்பினை மூட்டுவதோ? 19
தாழ்த்தப்பட் டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச்
சாற்றிடும் தேசமக்கள் - அவர்
வாழ்த்தி அழைக்கும் யுசுதந்தரம்ரு தன்னை
மறித்திடும் நாசமக்கள். 20
தாழ்ந்தவ ருக்கும் உயர்ந்தவ ருக்கும்இத்
தாய்நிலம் சொந்தம்அன்றோ? - இதில்
சூழ்ந்திடும் கோயில் உயர்ந்தவர்க்கே என்று
சொல்லிடும் நீதிநன்றோ? 21
'தாழ்ந்தவர்' என்றொரு சாதிப் பிரிவினைச்
சாமி வகுத்ததுவோ? - எனில்
வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த
வம்பு புகுத்தியதோ? 22
முப்பது கோடியர் பாரதத்தார் இவர்
முற்றும் ஒரேசமுகம் - என
ஒப்புந் தலைவர்கள் கோயிலில் மட்டும்
ஒப்பாவிடில் என்னசுகம்? 23
இப்பெரு நாடும் இதன்பெருங் கூட்டமும்
'யாம்' என்று தற்புகழ்ச்சி - சொல்வர்
இப்புறம் வந்ததும் கோயிலி லும்நம்
இனத்தைச்செய் வார்இகழ்ச்சி. 24
மாடுண்ப வன்திருக் கோயிலின் வாயிலில்
வருவதற் கில்லைசாத்யம் - எனில்
ஆடுண்ணு வானுக்கு மாடுண்ணுவோன் அண்ணன்
அவனே முதற்பாத்யம். 25
நீடிய பத்தியில் லாதவர் கோயில்
நெருங்குவதால் தொல்லையே! - எனில்
கூடிஅக் கோயிலில் வேலைசெய் வோருக்கும்
கூறும்பக்தி இல்லையே. 26
'சுத்த மிலாதவர் பஞ்சமர்; கோயிற்
சுவாமியைப் பூசிப்பரோ?' - எனில்
நித்த முயர்ந்தவர் நீரிற் குளிப்பது
யாதுக்கு யோசிப்பிரே. 27
நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி
நேரில்அக் கோயிலிலே - கண்டும்
ஒத்த பிறப்பின ரைமறுத் தீருங்கள்
கோயிலின் வாயிலிலே. 28
கூறும் 'உயர்ந்தவர்' 'தாழ்ந்தவர்' என்பவர்
கோயிலின் செய்திவிட்டுப் - புவி
காறியு மிழ்ந்தது யார்முகத்தே யில்லை?
காட்டுவீர் ஒன்றுபட்டு. 29
வீறும் உயந்தவர் கோயில் புகுந்ததில்
வெற்றிஇந் நாட்டில்உண்டோ? - இனிக்
கூறும் இழிந்தவர் கோயில் புகுந்திடில்
தீதெனல் யாதுகொண்டோ? 30
Labels:
பாவேந்தர் பாரதிதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment