Friday 31 January 2014

நீந்திக்கடந்த நெருப்பாறு . அங்கம் :3

நீந்திக்கடந்த நெருப்பாறு .

அங்கம் :3

அன்று மதிய உணவு முடிந்த பின்பு அணித்தலைவர்களையும் குழுக்களுக்குப் பொறுப்பானவர்களையும் தளபதி அழைத்திருந்தார். அவர் தாக்குதல் திட்டங்களை வரைபடம் மூலம் விளக்கினார். “இண்டைக்கு நாங்கள் எதிரி எதிர்பார்க்காத நேரத்திலை, அவன் எதிர்பாராத விதமான ஒரு தாக்குதலை நடத்தப்போறம்” அவர் இப்படிச் சொல்லிவிட்டு இடைநிறுத்தியபோது அனைவரும் அவரின் முகத்தை ஆவலுடன் நோக்கினர்.

அவர் தாக்குதல் திட்டம் வரையப்பட்டிருந்த படத்தை ஒரு தடியால் குறிப்பிட்டுக் காட்டியவாறு கூற ஆரம்பித்தார்.

“எதிரி தன்ர பிரதான முகாமிலயிருந்து ஒரு வால் போன்ற வடிவத்திலை முன்னேறி அரண் அமைச்சிருக்கிறான். முதல் தாக்குதல் இப்ப நாங்கள் நிக்கிற பக்கத்தால கடுமையாகவும் வேகமாகவும் பெரிய அளவிலயும் ஆரம்பிக்கும். இந்தத் தாக்குதலில எதிரியின்ர கவனம் முழுக்கப் பதிஞ்சிருக்க முகாமிலயிருந்து வால் ஆரம்பிக்கிற பகுதியில வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் இரண்டு அணிகள் உள்ள உடைச்சுக்கொண்டு போகும். ஒண்டு முகாம் பக்கம் தாக்குதலை நடத்தி அங்கயிருந்து உதவி வராமல் தடுக்க மற்ற அணி வால் பக்கம் கடுமையான தாக்குதலை நடத்தும். எதிரிக்கு ஒரே நேரத்தில முன்பக்கமும் பின்பக்கமும் அடி விழுற அதே நேரம் வலப்பக்கமும் இப்பக்கமும் ஒவ்வொரு அணியளும் தாக்குதலத் தொடங்கும். அப்பிடி வால் பகுதிய முழுமையா அழிச்ச நிலையில முகாம் பக்கமிருக்கிற இரண்டு அணிகளும் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் விலகியிடவேணும். அந்த நேரத்தில முகாமிலயிருந்து உதவிக்கு வாற அணியை பொக்ஸ்சுக்கை இழுத்து அழிக்கவேண்டியதுதான். அந்த நேரம் முகாம் கணிசமானளவு பலவீனப்பட்டிடும். கட்டளை வந்ததோட முகாமை நோக்கிய தாக்குதலைத் தொடங்கவேண்டியதுதான். கிட்ட கிட்ட நிண்டு சண்டை பிடிக்கிறதால அவன்ரை செல்லடிய சமாளிக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் நாங்கள் இஞ்சாலை சண்டை நடக்க உள் முகாமுக்குச் செல் போட்டுக்கொண்டிருப்பம். முகாமில தாக்குதல் தொடங்கினதும் நிப்பாட்டிப்போடுவம்” தளபதி சொல்லி முடித்ததும் எல்லோர் மனதிலும் ஒரு பெரும் உற்சாகம் பொங்க ஆரம்பித்தது. அனைவரும் அமைதியுடனும் ஆர்வத்துடனும் தங்களுக்குள் கற்பனையில் தாக்குதல் வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர்.

“சரி.. தாக்குதலுக்கான நேரத்தைப் பிறகு அறிவிப்பம். நீங்கள் இப்பவே போய் உரிய தயாரிப்புக்களைச் செய்து எல்லாத்துக்கும் தயாராயிருங்கோ!”

எல்லோரும் தங்கள் இடங்களை  நோக்கிப் புறப்பட்டனர். சக போராளியான மயூரன் சொன்னான்,

“சிவமண்ண! திட்டமெண்டால் திட்டம் தான்… வெற்றி நிச்சயம் மட்டுமில்ல ஏராளமான ஆயுதங்களும் அள்ளலாம்”

“திட்டம் திறம் தான்… ஆனால் இது எத்தினை பேர் சிந்தின ரத்தத்தில வகுத்த திட்டமெண்டு தெரியுமே? எனக் கேட்டான் சங்கரசிவம்.

“நீங்கள் என்னண்ணை சொல்லுறியள்?’’

“எங்கட “வேவு” போராளியள் இரவு, பகல் பாராமல் ஆபத்தான இடங்களுக்கையெல்லாம் புகுந்து எடுத்த தகவல்களை வைச்சுத்தானே திட்டங்கள் தீட்டுறது. இந்தப் பணியில எத்தினை பேர் உயிர் குடுத்திருப்பினம் தெரியுமே?”

“ஓம்.. ஓம்… எதிரியின்ரை கோட்டையளுக்கை புகுந்து தகவல் எடுக்கிறது எண்டால் அது பயங்கர ஆபத்துத்தான வேலை தானே” என ஆமோதித்தான் மயூரன்.

சங்கரசிவத்தின் அணியினருக்கு முன்பக்கப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பக்கதையே எப்போதும் எதிரி எதிர்பார்திருப்பானாகையால் அவனின் கடுமையான தாக்குதலுக்கு முகம் கொடுத்தே முன் செல்ல வேண்டிவரும். அவர்கள் அன்று காலையில் தான் காவலரண்களை அமைத்திருந்தபடியால் அவற்றை உடைப்பது வழமையை விடச் சுலபமாயிருக்கும் எனவே நம்பினான்.

எப்படியிருந்த போதும் ஒரு பெரிய வெற்றியை ஈட்டப்போகிறோம் என்ற நம்பிக்கை மட்டும் மிக உறுதியாக அவனுள் பதிந்திருந்தது.

பரமசிவம் தான் கொண்டு வந்த உடும்பை உரித்து, வெட்டி பார்வதியிடம் கொடுத்துவிட்டு தோட்டத்தை நோக்கிப் புறப்பட்டார்.

அவர் அங்கு போன போது சுந்தரம் மீண்டும் நீரிறைத்து மிளகாய்க் கன்றுகளுக்குப் பாய்ச்சிக்கொண்டிருந்தான்.

மிளகாய் கன்றுகள் செழிப்பாகவும் இடைப்பழமும் காயுமாக நிமிர்ந்து நின்றிருந்தன. வேலாத்தையும் முத்தமாம்மாவும் முற்றிய பிஞ்சு மிளாய்களையும், இடைப்பழங்களையும் பறித்துக் கொண்டிருந்தனர். இம்முறை பாரிய விளைச்சல் ஏற்படுமென்ற அறிகுறிகள் தென்பட்டன.

இம்முறை காவிளாய் குழை தாட்டதுடன் பட்டியெரு போட்டிருந்தார். அந்தப் பசளைகள் மிளகாய் கன்றுகளை நல்ல செழிப்பாக எழுப்பியிருந்தன. மிளகாய்கள் கூட மிக நீண்டவையாகவும் பொலிவாயும் காணப்பட்டன.

சுந்தரத்தின் மிக அருகில் சென்ற அவர், “தம்பி… நீ வீட்டை போய் ஆறு.. நான் இறைச்சு முடிச்சுப்போட்டு வாறன்..” என்றார் பரமசிவம்.

அவனோ முத்தம்மாவுடன் நிற்பதற்காக எவ்வளவு நேரமும் தோட்டத்தில் வேலை செய்யத் தயாராயிருந்தான்.

“இல்லையய்யா… நான் இறைக்கிறன்..” என்றான் அவன்.

“நீ விடியத்துடக்கம் தண்ணி மாறுறாய்.. களைச்சுப் போனாய்… போய் ஆறுதலாய் இரு” என்றுவிட்டு மண்வெட்டியை வாங்கினார் பரமசிவம்.

எதுவுமே செய்ய முடியாத நிலையில் மண்வெட்டியைக் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டான் சுந்தரம். நடு வாய்க்காலுக்கால் வந்தபோது ஒரு முறை திரும்பி முத்தம்மாவைப் பார்த்தான். அப்பொழுது அவளும் அவனையே பார்த்ததைக் கண்டுகொண்டான். அவன், தான் பார்த்ததைக் கண்டுவிட்டான் எனத் தெரிந்ததும் முத்தம்மா தலையைக் குனிந்து கொண்டு மிளகாய் பிடுங்க ஆரம்பித்தாள்.

சுந்தரம், “போக விடை தாருமணை பெற்றவளே தாயே! அந்தப் பொற்கொடியாள் மாலையிடம் பெற்றவளே தாயே” எனப் பாடிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான். அவன் மனதில் பாட்டு, “போக விடை தாருமணை ஆரியப்பூமாலை எந்தன் பெற்றவளாம் தாயிடமே ஆரியப்பூமாலை”, என்று அமைந்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் போல ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது.

அவன் வீட்டுக் கடப்படிக்கு வந்தபோது அவனின் நண்பன் செல்வம் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அவன் சுந்தரத்தைக் கண்டதும் சைக்கிளை நிறுத்திவிட்டு, “நீ போகேல்லயே…? என்று கேட்டான்.

“எங்கை?”

“இயக்கம் ஏதோ கூட்டமெண்டு தட்சிணாமருதமடு பொதுநோக்கு மண்டபத்துக்கு வரச்சொல்லியிருக்குது”, என்றான் அவன்.

“என்ன கூட்டமாம்?”

“என்னண்டு தெரியேல்ல… வாவன் போவம்..”, எனக் கேட்டான் செல்வம்.

“ம்.. இயக்கம் கூப்பிட்டால் போகத்தானே வேணும்.. போகேக்க இதால வாவன் நானும் வாறன்!” என்றான் சுந்தரம்.

“ஓ.. இரண்டு பேரும் போவம்”, என்றுவிட்டுப் புறப்பட்டான் செல்வம்.

அன்று மாலை பொது நோக்கு மண்டபத்துக்கு அவர்கள் போனபோது அங்கு ஏற்கனவே முப்பது, நாற்பது வாலிபர்கள் கூடிநின்றனர். எவருக்குமே என்ன கூட்டம் என்பது தெரிந்திருக்கவில்லை. சிறிது நேரத்தில் வட்டப் பொறுப்பாளர் வந்து கூட்டத்தை ஆரம்பித்தார். அவர் ஒரு முக்கிய விஷயமாக கொஞ்சப் போர் தேவைப்படுவதாகவும், அடுத்த நாள்தான் திரும்ப முடியும் எனவும் விருப்பமானவர்கள் வரும்படியும் கேட்டுக்கொண்டார்.

பெரும்பாலானவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

செல்வம், “வீட்டை சொல்லிப்போட்டு வாறம்!” என்றான்.

“அது தேவையில்லை.. நாங்கள் அறிவிச்சு விடுறம்!” என்றார் பொறுப்பாளர்.

செல்வமும் சுந்தரமும் அவர்களுடன் போக முடிவெடுத்தனர். சிறிது நேரத்தில் வந்த வாகனத்ததில் அனைவரும் ஏறிக்கொண்டனர். பாலம்பிட்டி நோக்கிய பாதையில் போன வாகனம் சிறிது தூரம் சென்ற பின்பு ஒரு காட்டுப்பாதையில் இறங்கியது.

அந்தச் சுற்றாடலே இருளில் கனத்துப் போய்க்கிடந்தது. எங்கும் ஒரே நிசப்தம். வழமையாகக் கோஷ்டி கானமிசைக்கும் சில் வண்டுகள் கூட அன்று அமைதி பூண்டுவிட்டன.

போராளிகள் வரப்போகும் கட்டளையை எதிர்பார்த்து உருமறைப்புச் செய்து படுத்திருந்தனர்.

எங்கோ தொலை தூரத்தில் ஆட்காட்டியின் குரல் ஒரு முறை ஒலித்து ஓய்ந்தது. சங்கரசிவம் அவசரமாக இரவுப் பார்வைச் சாதனத்தை எடுத்து அதனூடாக சுற்றும் முற்றும் பார்த்தான். எவ்வித அசைவும் தென்படவில்லை.

கிழக்குத் திசையில் சந்திரன் தலை நீட்டவே மிக மங்கலான ஒரு ஒளி பரவ ஆரம்பித்தது.

போராளிகள் முகாமின் பக்கமிருந்து போன எறிகணை முகாமுக்குள் வீழ்ந்து வெடிக்க முகாமின் சகல விளக்குகளும் அணைந்தன. செல், மின் பிறப்பாக்கியின் மீது விழுந்திருக்க வேண்டும். கட்டளை வெடியதிரவே சிவத்தின் அணியினர் படையினரின் நிலைகளை நோக்கிப் பாய்ந்தனர். படையினர் விளக்குகள் அணைந்த அதிர்ச்சியிலிருந்து மீள முன்பே அவர்களை நோக்கி ரவைகள் பாய ஆரம்பித்தன…

(தொடரும்)

அரவிந்தகுமாரன்.

Wednesday 29 January 2014

நீந்திக்கடந்த நெருப்பாறு ! அங்கம் :2

பண்டிவிரிச்சானுக்குச் சென்ற பரமசிவத்தால் எதையுமே திடமாக அறிய முடியவில்லை. போராளிகளிடம் விசாரித்த போது எவரும் காயப்பட்டோ, வீரச்சாவடைந்தோ வரவில்லை எனவும் முள்ளிக்குளத்துக்குள் இராணுவம் இறங்கிவிட்டது என்பதையும் மட்டும் அறிய முடிந்தது.அப்படியானால் சண்டை எதுவும் நடைபெறாமலே இராணுவம் முன்னேறியிருக்க வேண்டும் என்றே கருதவேண்டியிருந்தது. ஆனால் இரவு, பகலாக மழை, வெயில், பனி என்பவற்றைப் பொருட்படுத்தாமல் எல்லை காக்கும் போராளிகள் எந்தவித எதிர்ப்புமின்றிப் படையினரை முன்னேற விட்டிருப்பார்கள் என்பதை அவரால் நம்பமுடியவில்லை. பல்லாயிரம் சில் வண்டுகள் ஒன்றாக ஒலித்துவிட்டு திடீரென நிறுத்தும் போது ஏற்படும் ஒரு விதமான இனம்புரியாத பயம் போன்ற ஒரு உணர்வே அவரை ஆட்கொண்டிருந்தது. பலவிதமான கேள்விகளால் குழம்பிப் போயிருந்த மனதுடன் அவர் தனது சைக்கிளை மீண்டும் மடுவை நோக்கி மிதித்தார். முள்ளிக்குளம் மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்து மடுவிலும் தட்சணாமருத மடுவிலும் தங்கியிருந்தனர். முள்ளிக்குளம், குஞ்சுக்குளம் பிரதேசங்கள் அடிக்கடி சண்டைகள் நடக்கும் இடங்களாகவே விளங்கின. அவர் மடுவைத் தாண்டி தட்சணா மருதமடுவை நோக்கி வந்த போது முள்ளிக்குளம் முருகப்பரைக் கண்டதும் சைக்கிளை நிறுத்தினார். முருகப்பருக்குத் தெரியாத காட்டுப் பாதைகளே கிடையாது. காடுகளில் கேட்கும் சிறு அசைவுகளில் ஒலியையும் அவர் காதுகள் துல்லியமாகக் கிரகித்து அது எப்படிப்பட்டது எனக் கண்டுபிடித்துவிடும். அது போன்றே அவரின் நுகர்வு சக்தியும் அற்புதமானது. வாசனையை கிரகித்தே சுற்று வட்டாரத்தில் என்ன மிருகங்கள் என்று கண்டுபிடித்துவிடுவார். அவர் கையில் வேட்டைக்கட்டு கட்டப்பட்ட உடும்புக்கள் இரண்டைக் கொண்டு வந்த போதே காட்டுக்கு வேட்டைக்குப் போயிருக்கிறார் என்பதை பரமசிவம் புரிந்து கொண்டார். சைக்கிளை நிறுத்திய பரமசிவம் “என்ன.. ராத்திரி காட்டுக்க இறங்கியிருக்கிறாய் போல கிடக்குது!” என முருகப்பரைப் பார்த்துக் கேட்டார். “ஓ.. ஒண்டும் அணையேல்ல.. ஒரே செல்லடி.. அதில காட்டுக்கை கனதூரம் உள்ள இறங்கவும் முடியேல்ல. திரும்பி வரேக்கை தான் நாயள் ரண்டு உடும்புகளைக் கௌவிச்சுதுகள்” உடும்புகளை நன்றாகப் பார்த்துவிட்டு பரமசிவம் “ஒண்டைத்தாவன்”, எனக் கேட்டார். முருகப்பர் பெரிதாக இருந்த உடும்பைத் தூக்கி பரமசிவத்திடம் கொடுத்தார். விலை பேசுவது உடனே காசை எதிர்பார்ப்பது போன்ற பழக்கமெல்லாம் அவர்களிடம் இல்லை. மாலையோ அல்லது அடுத்த நாளோ முருகப்பரைச் சந்திக்கும் போது ஏதோ தான் விரும்பும் பணத்தைக் கொடுப்பார் பரமசிவம். முருக்கப்பரும் விரித்துப்பார்க்காமலேயே வாங்கி இடுப்பில் சொருகிக் கொள்வார். “முள்ளிக்குளம் பக்கம் ஏதும் விசேசமே?” “ஒண்டுமாய் விளங்கேல்ல.. விடியப் புறமாய் நாலைஞ்சு பெரிய வாகனங்களில பொடியள் முள்ளிக்குளம் பக்கமாய் போனாங்கள்… ராத்திரியும் ஒரே செல்லடி” என்றார் முருகப்பர். முள்ளிக்குளம் நோக்கிப் போராளிகள் போகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட போது அவருக்கு சில விஷயங்கள் புரிவது போல் தோன்றியது. இப்போது நிலவுவது புயலுக்கு முன்பான அமைதியாகத் தான் இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது. உடும்பை வாங்கி சைக்கிள் ஹான்டிலில் கொழுவிக் கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டார். தோட்டத்தில் மிளகாய்க் கண்டுகளுக்கு தண்ணீர் கட்டிக்கொண்டிருந்த பரமசிவத்தின் இளைய மகனுக்குப் பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது. பத்துப் பதினைந்து வருடம் பழமை வாய்ந்த “வூல்சிலி” நீரிறைக்கும் இயந்திரம் ஒரு சீரான ஒலியுடன் மோட்டையிலிருந்த நீரை வாரி இறைத்துக் கொண்டிருந்தது. தண்ணீர் மாறுவதில் ஒரு சிறிய தாமதம் ஏற்பட்டாலும் நீர் வாய்க்கால்களே உடைத்துப் பாயத் தொடங்கிவிடும். வழமையாக ஏழரை எட்டு மணிக்கெல்லாம் வந்து தன்னிடம் மண்வெட்டியை வாங்கிக் கொண்டு தன்னைச் சாப்பிட விடும் பரமசிவம் ஒன்பது மணியாகியும் வராதது அவனுக்கு கோபத்தை மூட்டியது. இறைப்பை நிறுத்துவது என முடிவு செய்தான். ஆனால் தண்ணீர் மாறுவதை விட்டு விட்டு இயந்திரத்தை நிறுத்தப் போனால் நீர் மேவிப்பாய்ந்து வாய்க்கால்கள், பாத்திகள் எல்லாவற்றையும் உடைத்துவிடும். தனது தாயுடன் மிளகாய்ப் பழம் பிடுங்கிக் கொண்டிருந்த முத்தம்மாளைக் கூப்பிட்டான் அவன். அவள் அருகில் வந்ததும், “இந்தத் தண்ணிய கொஞ்ச நேரம் மாறு, நான் போய் மிஷின நிப்பாட்டிப்போட்டு வாறன்”, என்றான் சுந்தரசிவம். அவள் எதுவும் பேசாமல் மண்வெட்டியை வாங்கிக் கொண்டாள். முத்தம்மாளின் தகப்பனான பெருமாளும், தாய் வேலம்மாவும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், 1983 இன வன்முறைகளை அடுத்து முதலில் வவுனியாவிலும் பின் பூவசரன்குளத்திலும் குடியிருந்தனர். பின்பு இராணுவ நடவடிக்கை காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து மடுவுக்கு வந்தனர். இப்போ தட்சிணாமருத மடுவில் நிரந்தரமாகக் குடியிருந்தனர். கூலி வேலை செய்தே அவர்கள் சீவியம் போனது.. பெருமாள் ஒரு நல்ல தொழிலாளியாக இருந்த போதும் கசிப்பு அவனை நிரந்தர நோயாளியாக்கிவிட்டது. தகப்பனையும், நாலு பிள்ளைகளையும் வேலாயியும் மூத்த மகள் முத்தம்மாவுமே உழைத்துப் பார்க்க வேண்டியிருந்தது. முத்தம்மா நன்றாகவே பாடுவாள். சில தடவைகள் காத்தவராயன் கூத்துப் பார்த்திருக்கின்றாள். அவளுக்கு அப்படியே முழுப்பாடல்களும் பாடமாகிவிட்டது. அவள் மிளகாய்ப்பழம் பிடுங்கும் போது காத்தான் பாட்டுக்களைப் பாடுவதைச் சுந்தரம் தன்னை மறந்து ரசித்திருக்கிறான். பரமசிவத்தாரின் கூத்தில் சுந்தரம் தான் ஆதிகாத்தானாக நடிப்பான். அவனின் வரவுப்பாட்டுக்கு மக்களிடம் ஒரு தனி மவுசு உண்டு. ஆரியப்புமாலையாக முத்தம்மாவை நடிக்க வைக்கவேண்டுமென அவனின் மனதுள் ஒரு ஆசை இருந்ததாலும் அவன் அதை வெளியே சொல்வதில்லை. ஏனெனில் பெண் பாத்திரங்களுக்கும் வழமையாக ஆண்களே நடிப்பார்கள். சுந்தரம் மண்வெட்டியை அவளிடம் கொடுத்தவாறே.“நீ பாடிப்பாடித் தண்ணி மாறு. நான் கேட்டுக்கொண்டே போய் மிசினை நிப்பாட்டுறன்” என்றான். “நீங்க பாடிக்கொண்டு போங்கோ.. நான் கேட்டுக்கொண்டே தண்ணி மாறுறன்” என்று விட்டு நீரைப் பாத்தி மாற்றி விட்டாள் அவள். “அப்படியே, போய்க்கொண்டே பாடுறன் கேள்” என்று விட்டு இயந்திரம் இருந்த மோட்டைக்கரையை நோக்கி நடந்தான். அவன் வாயில் “விடமாட்டேன்…. ஆரியமாலையை மாமணம் செய்யாமல் விடமாட்டேன்” என்ற பாடல் வரிகள் இனிமையாக வெளிவந்து அந்தத் தோட்டமெங்கும் நிறைத்தது. அதற்கு எதிர்ப்பாட்டுப்பாட வேண்டும் என்ற உந்துதல் அவளுள் எழுந்த போதும் சிரமப்பட்டு அதை அடக்கிக் கொண்டாள். அவள் முகம் மட்டும் அவளையறியாமலே “குப்பென்று” சிவந்தது. சுந்தரம் நீரிறைக்கும் இயந்திரத்தை நிறுத்திவிட்டுத் திரும்பிய போது பார்வதி சாப்பாட்டுடன் வந்துகொண்டிருந்தாள். சுந்தரம் “ஐயா, எங்கையம்மா?” எனக் கேட்டான். “அவர் என்னை இஞ்சை போகச் சொல்லிப்போட்டு மடுப்பக்கம் போட்டார். நீ கையைக் கழுவிப் போட்டு சாப்பிட வா” என்றாள் அவள். அவன்“ தகரப்பட்டையில் எடுத்து தை்திருந்த நீரில் கை கழுவி விட்டுதாயின் அருகில் வந்தான். பார்வதி, “வேலாயி, முத்தியையும் கூட்டிக்கொண்டு வா.. ஒரு பிடி சாப்பிடுங்கோ” எனப் பலத்த குரலில் அழைத்தாள். “வேண்டாமம்மா.. நாங்க றொட்டி கட்டீற்று வந்தம்’ என்றாள் வேலாயி. “அதைப் பிறகு தின்னுங்கோ.. இப்ப உங்களுக்கும் சேத்துத் தான் கொண்டந்தனான்” வேலாயி மேற்கொண்டு எதுவும் பேசாமலேயே முத்தம்மாவுடன் அருகில் வந்தாள். பார்வதியின் பழம் சோற்றுக் குழையல் சாப்பிடுவதில் அவர்களுக்கு தனி விருப்பம் உண்டு. பழைய விரால் மீன் குழம்புக்குள் போட்டுக் குழைத்த பழஞ்சோற்றைப் பிஞ்சு மிளகாயுடன் கடித்து உண்ட போது அது அவர்களுக்கு அமுதமாகவே தோன்றியது. எல்லோரும் வயிறு நிறையச் சாப்பிட்டனர். சுந்தரம், முத்தம்மா ஆவலுடன் சாப்பிடுவதை இடையிடையே பார்த்து ரசிக்கத் தவறவில்லை. அவர்கள் இவ்வாறு சந்தோசமாக தோட்டத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அதே வேளையில் களமுனையில் இதுவரை குழம்பிய மனதுடன் தவித்துக் கொண்டிருந்த சங்கர சிவத்துக்கும் ஒரு மகிழ்ச்சி நிறைந்த தெளிவு பிறப்பது போலவே தோன்றியது. புதிதாக இரண்டு அணிகள் களமுனைக்கு வந்ததுமே அடுத்த தாக்குதல் ஒன்று இடம்பெறப் போவதாகவே அவன் கருதினான். இரவு மேற்கொள்ளப்பட்ட பின் நகர்வில் ஒரு ஆழமான அர்த்தம் இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.

(தொடரும்)

அரவிந்தகுமாரன்

முத்துக்குமாரா !

முத்துக்குமரா!
முகம் தெரியாப்போதினிலும் செத்துக்கிடக்கின்றாய் எமக்காக எனவறிந்து தேகம் பதறுகிறதே திருமகனே!

உந்தனது ஈகம் அறிந்து
எம்மிற்தீ பற்றுகுதே நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில் அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்.

உன் மேனியில் மூண்ட நெருப்பு உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார் நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன். சின்ன அக்கினிக்குஞ்சே! 

உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய் அந்தச்சோதிப்பெருவெளிச்சம் எமக்குச்சக்தி தரும் வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும். உன் இறுதி மூச்சு புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும் .

எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது. தம்பி!
வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன்.
நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல எமக்குப்பலம் நல்கும் சக்திக்குமார் இங்கிருந்து உன் முகத்தைக்காண்கிறேன்.
உன் குரலைக் கேட்கிறேன். உன் மூச்சை உள் வாங்குகிறேன். இடையில் கடல்கடந்தும் வருகின்றது உன் சிரிப்பின் ஓசை.

எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்?
கடலிலே அனுப்பி வையுங்கள் அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ, ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க, கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச. மகனே!

நெருப்பெரியும் தேசத்தை எண்ணி நெருப்பில் எரிந்தவனே ! உன்நெஞ்சின் உணர்வுகளை வாங்கி இங்கே உயிர்கள் பிறக்கும் உன் இறுதி மூச்சை உள்வாங்கி உயிர்கள் சுவாசிக்கும் நாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர் உயிர் அரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது ஆயினும் பகைக்கு பணிவிடை செய்யோம் என்றபடி நிமிர்ந்துள்ளோம் நாங்கள்.

முத்துக்குமார், நீ செத்துக்கிடக்கின்றாயாமே எமக்காக யாராவது அவனின் புனித உடலை எமக்கு பொதிசெய்து அனுப்பமாட்டீர்களா?
இந்த வீரமண்ணில் விதைப்பதற்காக அந்த வித்துடல் வேர் பிடித்து புதிய தலைமுறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக. தம்பி!

வார்த்தை ஏதும் வரவில்லையே உன்னை வனப்புச்செய்து வாசலில் வைப்பதற்காக தமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகிறது உன் கடைசிக்கடிதத்தின் பொருள் உணர்ந்து நெஞ்சுருகி உன்னைப்பாடுகின்றது தமிழீழத்தமிழ். நண்பனே! முகம் தெரியாத எம்முத்துக்குமார் உன்னை நெஞ்சில் வைத்து சத்தியம் செய்கின்றோம். நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது விண் தொட எழும் – அந்த வெளிச்சத்தில் நாங்கள் ஒளி பெறுவோம். என் பிரிய உறவே!

சென்று வருக திரும்பி வராவிட்டாலும் நன்றியென்ற ஓருணர்வை நாம் சுமந்து நிற்கின்றோம்.

பிரிய தோழனே உனக்கு தமிழீழத்தின் வீரவணக்கம் -

தமிழீழத்திலிருந்து புதுவை இரத்தினதுரை.

“தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்”