Sunday 9 November 2014

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களுக்கு வீரவணக்கம்

நடராஜா ரவிராஜ் (ஜூன் 25, 1962 – நவம்பர் 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு
`````````````````````````````
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.

அரசியலில் இணைவு
`````````````````````````````````
ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.

1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார்.

2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.

மறைவு
```````````````
நவம்பர் 10, 2006 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ரவிராஜ் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் அவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.

மாமனிதர் விருது
````````````````````````````
தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கௌரவித்துள்ளார்.

வரலாற்றில் நிலைத்து விட்ட ரவிராஜ்
```````````````````````````````````````````````````````````
எமது இளந்தலைமுறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த 8 ஆண்டுகளில் எமது அரசியல் களம் வேகமான, மோசமான பல மாற்றங்களை அடைந்து, தற்போது இந்நாட்டில் தமிழினத்தின் இருப்பே ஒரு கேள்விக்குறியாக மாறியி ருக்கிறது.

இப்போது ரவிராஜ் உயிரோடிருந்திருந்தால் எமக்கு நல்லதொரு அரசியல் தலைமையை வழங்கியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இறுக்கமான அரசியல் சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் பாதையில் தனக்கேயுரித்தான ஆளுமையுடன் ஒரு ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்து, போராடும் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.

1962ஆம் ஆண்டு ஆடி மாதம் 25ஆம் திகதி ஆசிரியர்களான நடராஜா மங்களேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ரவிராஜ். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், பின் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் கல்வி கற்று, அதன்பின் சட்டக் கல்லூரியில் பயின்று 1989ஆம் ஆண்டு சட்டத்தரணியாகக் கொழும்பில் தனது பணியைத் தொடங்கினார். அக்காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான அப்பாவித் தமிழ் இளைஞர்களை மீட்பதற்கு தனது சட்டப்புலமையைப் பயன்படுத்தினார்.

இதனை விட அவர்களுக்கு ஆதரவளித்து வழிகாட்டுவதிலும் கொழும்பில் முன்னின்றுபாடு பட்டு வந்தார். இப்பணியில் அவர் பெற்ற கசப்பான அனுபவங்கள் யாவும் இயல்பாகவே இனப்பற்று மிகுந்திருந்த அவரது உள்ளத்தை மேலும் உரமாக்கின. தமிழரின் உரிமைகளை வென்றெடுக்கும் அரசியல் போராட்டக் களத்துக்கு உந்தித்தள்ளவும் இவை காரணிகளாக அமைந்தன. 2001ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர முதல்வராகப் பதவியேற்றது முதல் தமிழர் அரசியலில் அவர் பிரகாசிக்கத் தொடங்கினார். போர்ச் சூழலில் நலிவுற்றிருந்த மாநகர சபையின் பணிகளை மீளக் கட்டியெழுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டார். அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். பின் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மாமனிதர் ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலம் வெறும் 5 ஆண்டுகள்தான். எனினும், அக்குறுகிய காலப்பகுதியில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செய்யமுடியாத பணிகளை அவர் ஆற்றியிருந்தார். இதனை எல்லோரும் அறிவர். எத்தகைய வேலைப்பளு இருந்தாலும் மாதாந்தம் சாவகச்சேரியிலுள்ள அவரது இல்லமான ராஜ் அகத்தில் திரளும் மக்களைச் சந்திப்பதற்கு அவர் ஒருபோதும் தவறியதில்லை.

மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதுடன், பிரதேசத்திலுள்ள கல்விமான்களதும், முதியோர்களதும் ஆலோசனைகளைச் செவிமடுத்து அதன்வழியே, தனது பணிகளைச் செய்து வந்தார். இன்னொரு ஹிரோஷிமா என ரணில் விக்கிரமசிங்கவினால் வர்ணிக்கப்பட்ட அழிந்து போன சாவகச்சேரி நகரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், தென்மராட்சிப் பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவதிலும் முன்னின்று உழைத்தார். துன்பப்படுவோருக்குத் தானாகவே முன்வந்து உதவும் பண்பைக் கொண்டிருந்தார். இதனால் தான் அவர் குறுகிய காலத்திலேயே எல்லோராலும் விரும்பப்படும் ஒரு தலைவரானார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்துவந்த சொல்லொணாத் துன்பங்களையும் சிங்கள மக்க ளுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறையில் கொண்டு சென்றார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் அவற்றினை மிக லாவகமாகக் கையாண்டு தனது கருத்துக்களைக் கேட்போர் மனதில் உறைக்கவும், உணரவும் வைத்தார். தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். குறிப்பாகச் சிங்கள ஊடகங்களை மிகச் செம்மையான முறையில் பயன்படுத்தி தமிழர் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார்.

இவரது இந்தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய முதன்மைக் காரணியாக இருந்தது எனப்பரவலாகக் கருதப்பட்டது.தெற்கிலுள்ள சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் அவரை விடுதலைப் புலியாகவே கருதினர். தமிழர் உரிமைக்காகப் போராடுபவர்கள் சிங்கள மக்களின் விரோதிகள் என்ற சிங்கள கோட்பாட்டாளரின் கூற்றைப் பொய்யென்று சிங்கள ஊடகங்களினூடாக எடுத்துக்கூறி, இனங்களுக்கிடையிலான நல்லுறவை ரவி ராஜ் வளர்த்து வந்தார்.
மனித உரிமைகள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த ரவிராஜ் மனித உரிமை அமைப்புகளில் இணைந்து இலங்கையிலுள்ள சகல மக்களதும் உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்தார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு போர் மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அவர் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையின் கீழ் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென நம்பினார்.

தமிழர் பிரச்சினைக்கு யுத்தம் மூலம் தீர்வு காணமுடியாது என ராவிராஜ் தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துக் கூறி வந்ததால் தான் அவர் கொல்லப்பட்டார் எனக் கருதிய தென்னிலங்கை சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் அவரது புகழுடலை விகாரமாதேவி பூங்காவுக்குச் சுமந்து சென்று யுத்தம் பிரச்சினைக்குத் தீர்வாகாது எனக் கோஷமெழுப்பினர். கொழும்பில் நடந்த அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர். இது ரவிராஜ் இன உணர்வுள்ள ஒரு தமிழனாகவும், நாட்டுப்பற்றுள்ள ஒரு இலங்கையராகவும் திகழ்ந்தமையை எடுத்துக் காட்டியது.

என் அப்பாவை இழந்து துன்பத்தில் வீழ்ந்து விட்டோம் எல்லோரும் இப்போது வருகிறார்கள். அப்பாவின் உடல் புதைக்கப்பட்டு விடும். அத்தோடு எல்லோரும் மறந்து விடுவார்கள். இந்த அர்த்தமுள்ள வார்த்தைகள் ரவிராஜின் இறுதி நிகழ்வின்போது அவரது மகள் பிரவீனாவால் கூறப்பட்டவை. அவர் கூறியது போல ரவிராஜை மட்டுமல்ல தமிழ்மக்களின் விடிவுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து உடன் பிறப்புக்களையும் கூட நாம் மறந்து விட்டோம். இவ்வாறே இன்றைய நிலைமைகள் தமிழர்களின் விடியலை நேசிக்கும் ஒவ்வொருவரையும் எண்ணவும், ஏங்கவும் வைக்கின்றன.

சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திரநாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று கூறப்பட்ட வார்த்தைகள். தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் ரவிராஜ் என்றும் நிலைத்திருப்பார் என்பதையே உணர்த்தி நிற்கின்றன.

தமிழர் மனங்களில் மாமனிதராக நிறைந்திருக்கும் ரவிராஜ்
```````````````````````````````````````````````````````````````````````````````````````அன்றைய தினம் காலையில் உரிமைகளுக்காக உரத்து ஒலித்த குரல் மௌனித்தது’ என்ற செய்தி எம்மை உலுக்கியது. பலரது அன்பையும் ஆதரவையும் பெற்ற ஒருவரது உடல் குறைந்த வயதான 44 வயதில் மண்ணோடு மண்ணானது வேதனைக்குரியது. உடல் மறைந்ததே ஒழிய உள்ளத்திலிருந்து எழுந்த மக்கள் மீதான உணர்வுகளின் பிரதிபலிப்பு இன்னும் மறையவில்லை. அவ்வாறான ஒரு உயிர் 1962 ஜூன் 25 ஆம் திகதி ஆசிரியர்களான வேலுப்பிள்ளை நடராசா, திசைநாயகம் மங்களேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது பிள்ளையாக தென்மராட்சி மைந்தனாக “ரவிராஜ்’ என்ற பெயரில் உதித்தது.

கல்வி, தொழில், குடும்பம்
```````````````````````````````````````
தனது பாலர் வகுப்பை சாவகச்சேரி பெண்கள் கல்லூரியிலும் ஆரம்பக் கல்வியை சாவகச்சேரி டிறிபெக் கல்லூரியிலும் உயர் கல்வியை யாழ்ப்பாண பரியோவான் கல்லூரியிலும் படித்து 19841986 சட்டக் கல்லூரியில் படித்து 1987 இல் உயர் நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து சட்டத்தரணியாக தலைநிமிர்ந்தார்.

1990 இல் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக சேர்ந்து இரு ஆண்டுகள் பணியாற்றி, பின்பு கொழும்பு மனித உரிமைகள் இல்லத்தின் பணிப்பாளர் பிரான்சிஸ் சேவியரின் அழைப்பின் பேரில் அவருடன் இணைந்து மனித உரிமைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, அங்கு பல ஆண்டுகள் பணியாற்றிய பின் சுயமாக, கொழும்பில் தனக்கென ஒரு அலுவலகத்தை அமைத்து தொழில் ஆரம்பித்து தனது தொழிலில் கணிசமான வெற்றியும் கண்டார். பிரபல மூத்த சட்டத்தரணியும் பரிஸ்டருமான ஆர்.ஈ. தம்பிரத்தினத்தின் கனிஷ்ட சட்டத்தரணியாக தொழில்புரிந்து பிரபலமான எயார் லங்கா குண்டு வெடிப்பு வழக்கில் அவருடன் எதிரிகளுக்காக வாதாடியதோடு தனித்து பல முக்கியமான வழக்குகளை பொறுப்பெடுத்து வெற்றியும் கண்டார்.

தனது பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க அவரும் 1990 பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி வைகுந்தன் காமாட்சி என்பவர்களின் புதல்வியான யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான சசிகலாவை காதலித்துக் கரம் பற்றி இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையானார்.

மக்களுக்காக அரசியலுக்குள் பிரவேசம்
`````````````````````````````````````````````````````````````
தனது இளமைப் பருவம் தொடக்கம் அரசியலில் ஆர்வம் காட்டிய ரவிராஜ் தந்தை செல்வாவின் அரசியல் கொள்கைகளினாலும் செயற்பாடுகளினாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு அக்காலத்து தமிழ்த் தலைவர்களுடன் தன்னை ஈடுபடுத்தி அவர்களின் நன்மதிப்பினைப் பெற்று அரசியலினுள் பிரவேசித்தார். எல்லா அரசியல் தலைவர்களைப் போலவே உள்ளூராட்சி மன்றங்களினூடாக அரசியல் பாதையில் தனது தடத்தினைப் பதித்தார். பின்வருமாறு அவருடைய அரசியல் பயணம் அவரது மரணம் வரை தொடர்ந்தது.

சட்டத்தரணி பொன்.சிவபாலன் யாழ்ப்பாண மேயராக பதவியேற்ற போது துணை மேயராக பதவியேற்றார்.

2001 ஆம் ஆண்டு யாழ்.நகர முதல்வரான சட்டத்தரணி பொன்.சிவபாலன் மறைவிற்குப் பின் ரவிராஜ் முதல்வரானார்.

2001 டிசம்பர் 5 பாராளுமன்ற அரசியலுக்குள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

2004 சித்திரை 2 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பாராளுமன்ற அரசியலில் கூடுதலான ஈடுபாடு காட்டிய போதிலும் அதற்கு வெளியே தமிழ் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டத்திற்கு பெரும் மதிப்பும் ஆதரவும் கொடுத்து வந்தார். தமிழ் அரசியல் தலைமைகளின் பாராளுமன்ற அரசியல் எந்த விதத்திலும் ஆயுதப் போராட்டத்திற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்

மரணத்தால் மட்டுமே மறைந்தவர்
````````````````````````````````````````````````````
தனது வாழ்நாட் காலத்தில் சட்டத்தரணியாகவும் அரசியல்வாதியாகவும் தனது சமூகத்தின் மீது பற்றுள்ளவராகவும் வாழ்ந்த ஒரு மனிதனை மரணம் மறக்கடிக்க முடியாது என்பதை இவரின் சேவைகள் என்றுமே நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதனால்தான் இன்னும் மக்கள் மத்தியில் மரணியாதவராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். தான் சட்டத்தரணியாக பதவியேற்றதில் இருந்து தனது சேவையை மக்களுக்காகவே அர்ப்பணித்துள்ளார். குறிப்பாக 1990 களில் மனித உரிமை இல்லத்தில் அவர் பணிபுரிந்த காலத்தில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்களையும் உயிராபத்துகளையும் ஏற்படுத்திய காலமாகும். அப்பாவித் தமிழ் மக்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இவர் சென்று பார்வையிடாத சிறைக் கூடங்கள் இல்லை என்றே கூறலாம்.

அப்பாவித் தமிழ் மக்களின் தடுத்து வைப்புக்கான விடுதலை கோரி இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உள்ள நீதிமன்றங்களுக்குச் சென்று வாதாடினார். அத்தோடு சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அந்தத் தொடர்புகளை இன விடுதலைக்காக பயன்படுத்தினார். அதிலும் யுத்த காலத்தில் அப்பட்டமாக மனித உரிமை மீறல்கள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில் தான் இறப்பதற்கு முன்பதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன் தனது எதிர்ப்பினை ஆர்ப்பாட்டத்தின் மூலமாக தெரியப்படுத்தி உலக நாடுகளின் கவனத்தையும் இலங்கை இனப்பிரச்சினையின் பால் ஈர்த்தெடுத்தார்.

தனது மனித உரிமைகள் செயற்பாட்டை தனியே குறுகிய நோக்கத்திற்காக மட்டுமன்றி ஆட்கடத்தல்கள், போரினால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை போன்ற உரிமை மீறல்களை துணிச்சலோடு தனியொருவனாகவும் அமைப்பு ரீதியிலும் முன்னெடுத்த ஒரு மாமனிதன் இவரே. சாதாரண ஊழல் கூடிய பொய்ப் பிரசாரங்களுக்கான அரசியலை முற்றிலும் வெறுத்தவர். பொது மக்களுக்கான அரசியல் என்ற கொள்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தனது அரசியலில் தான் வகித்த எந்தவொரு பதவியையும் தனது சுயநலத்திற்காக பயன்படுத்தியவரல்லர்.

அரசியல் மேடைகளென்றாலும் பாராளுமன்றமென்றாலும் சர்வதேச மட்டத்திலும் சரி தமிழர் பிரச்சினைகளை இவர் அளவிற்கு வேறொருவரும் இவர் வாழ்ந்த காலத்தில் பேசியிருக்க முடியாது. பெரும்பான்மை இனக் கட்சிகளுடன் சேர்ந்து அரசியல் நடத்தும் தமிழர்களைக் காட்டிலும் வெறும் அமைச்சுப் பதவிக்காக மக்களின் நலன்களை புறந்தள்ளிவிட்டு சுகபோகங்களுக்கும் பின்செல்லும் அரசியல்வாதியாக இவர் வாழ மறுத்த இவரின் தனித்துவமே இன்றும் இவரை மக்கள் மனதுகளில் நினைவுபடுத்திக் கொண்டு இருக்கின்றது.

அலுவலகங்களுக்குள்ளும், ஊடகங்களுக்கு முன்னும் மட்டும் இருந்து மக்கள் பிரச்சினைகளை பேசுவதை விடுத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், எதிர்க் கருத்துகள் என்பவற்றின் மூலமாகப் பேசத்துணிந்தவர். தான் இறப்பதற்கு முந்தைய நாளிலும் கொழும்பு கோட்டை புகையிரதநிலையத்திற்கு முன் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசாங்கத்தினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்திற்கு முன்பாக இவர் தலைமை தாங்கி நடத்திய ஆர்ப்பாட்டம் சர்வதேசத்தின் கண்களைத் திறந்ததுடன், இவர் கண்களை மூடுவதற்குக் காரணமாகவும் அமைந்தது என்று கூறலாம்.

மும்மொழிப் புலமை பெற்ற இவர் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு வளருவதற்கும் சிங்கள தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் உரிமை மீறல்களையும் தட்டிக் கேட்டமையால் பெரும்பான்மையின மக்களிடத்திலும் இவருக்கென தனி மரியாதை உண்டு என்பதை இவரின் இறுதி அஞ்சலியில் ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் வருகை தந்து இறுதி மரியாதை செலுத்தியமை சான்று பகரும். இனப்பிரச்சினையை இவர் பார்த்த விதத்தை இவரின் கூற்றுகளிலிருந்தே அறியலாம்.

“சிங்களவர்களும் தமிழர்களும் இராணுவப் போராட்டம், இரத்தக் களரியை இந்த நாட்டில் பார்க்க விரும்பவில்லை. அமைதியாகவே வாழ விரும்புகின்றனர். ஆழிப்பேரலையின் போது முல்லைத்தீவில் தமிழர்களுக்கு சிங்களவர் உதவினர். அவர்கள் யுத்தத்தினை விரும்பவில்லை. நான் பேச்சுகளை ஆதரிக்கின்றேன். இதை நான் மட்டும் சொல்லவில்லை. கலிங்கப் போருக்குப் பின் அசோகச் சக்கரவர்த்தி கூறியது தான் இதற்கு முதல் உதாரணம்’

இயல்பிலேயே போராட்ட குணம் உடையவராக ஆனபோதிலும் நடைமுறை யதார்த்தத்தை பேசுபவராகக் காணப்பட்டதோடு, இன்று முடிந்திருக்கின்ற போருக்குப் பின்னரான சூழ்நிலையை அன்றே அவர் ஆரூடம் கூறியிருக்கின்றார். இந்தியாவில் முன்னாள் முதலமைச்சரான எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற புரட்சிப் பாடல்களை அதிகளவில் விரும்பிக்கேட்கும் அதேநேரம் அதில் வரும் வசனங்களை வாயில் முணுமுணுக்கும் பழக்கத்தையும் ரவிராஜ் கொண்டிருந்தார்.

மக்கள் சேவையாளனுக்கு காலமளித்த பரிசு
```````````````````````````````````````````````````````````````````
பலமுறை உயிராபத்துகளில் இருந்து தெய்வாதீனமாகத் தப்பிய ரவிராஜுக்கு 11.10.2006 அன்றுதான் தான் இந்த உலகத்தை காண்கின்ற கடைசி நாள் என்ற உண்மை புரியாது போனது எம் எல்லோரையும் எப்போதும் வேதனைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும். தனது சொந்த மண்ணிலேயே தன்னை சங்கமமாக்க எண்ணிய இவர் போன்ற மக்கள் தலைவர்கள் எம் மத்தியில் அரிதாகவே உள்ளனர். பசியும் பட்டினியும் கொலையும் ஆட்கடத்தல்களும் சர்வ சாதாரணமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த ஒரு சூழலில் தன் போராட்ட வாழ்வை எதிரிகள் வழமை போலவே தமக்கே உரிய மிருகக் குணத்தில் இத் தலைவனின் உயிரைப் பறித்தது இன்று வரையிலும் தமிழ் மக்களின் வரலாற்றிலிருந்து களையப்பட முடியாத வேதனையாகவே உள்ளது. இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் பொன் விழா காணும் நாயகனாக நம்முடன் வாழ்ந்திருப்பார்.

இன்று வரையிலும் தீர்வு எதுவுமின்றி அல்லல்படும் மக்கள் அனைவரினதும் நெஞ்சங்களில் எழும் ஏக்கம் ரவிராஜைப் போல ஒரு தலைவன் இல்லையே என்பதாகும். காலத்தால் வெல்லப்பட்ட இவரது மரணம் மக்கள் மனதுகளில் இவரை ஒரு மாமனிதனாகவே இன்றுவரையிலும் நிலைநிறுத்தியுள்ளது. “மனிதர்களுக்கு மட்டுமே மரணம் அவர்களின் சிந்தனைக்கு மரணமேயில்லை’

ச.ஆனல்ட் பிரியந்தன்
சட்டத்தரணி
http://www.eelamview.com/2012/11/10/mamanithar-raviraj/

No comments:

Post a Comment